கவிதை

கவிதை
கவலையற்றது

...

கவிதை என்பது
இயற்கை உபாதை

அடக்கி வைத்தல் கடினம்

வராதபோது
வரவைப்பதோ அசாத்தியம்

...

பொறிதட்டி
பின்
எழுத்தாகாமல் 
போகும்
கவிதைகளைப் போலவே
காணாமல் போனது உருவகம்

...

எழுதத் தெரியாதவருக்குத்
தோன்றும் கவிதையானது
அதிகப் பிரசங்கம் செய்வதில்லை

...

எவருக்கும் தெரியாது
எந்த வரியை
அடித்துத் திருத்தி
இந்த வரியை எழுதினேனென்று

...

கவிதை என்பது
புணர்ச்சியின்பம் 

அதைப் படம் பிடித்து மாட்டி
அவ்வின்பத்தைப் பகிரும்
பிரயத்தனமே
அக்கவிதையை
எழுதுவதென்பது

...

ஒரே ஆற்றில்
இருவர் குளித்தாலும்

ஒரே நீர்
அவர்களை நனைக்குமா?

கவிஞர்
தம் கவிதை மூலம்
உம்மை
ஆற்றில் குளிக்க அழைக்கிறார்

நீர்
அவரது
கவிதையைப்
படிக்கையில்
அது
அங்கே
இருப்பதில்லை

...

ஒரு கவிதை தோன்றும்போது
கவிஞர் பிறக்கிறார்

அக்கவிஞரால் எழுதப்பட்டு
அக்கவிதை மரிக்கிறது

...

கவிதை
என்பதொன்றும்
சமையலல்ல

அது
கவிஞர்
சப்பிப் போட்ட
பனங்கொட்டை

...

கவிதை
ஓர் அனுபவம்

அதைப்
புரிந்துகொள்ளவே
கற்பனை வேண்டும்

எழுத
வெறும்
சரணாகதி போதும்

...

Comments

  1. சாம்பல் குவியலிலிருந்து
    மெல்லிய கீற்றாக
    கடைசிப்புகை உயர்ந்து
    மறைந்தது.
    நிற்சலனம்.

    ஒரு நொடிதான்.
    கங்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒளிரத் தொடங்கின.

    மெல்லமெல்ல நெருப்புவண்ண நிறம் சாம்பலெங்கும் பரவியது.

    குவியல் அதிர்ந்தது.
    கண்களை குறுக்கச்செய்யும் ஒளியுடன் உள்ளிருந்து செட்டைகளை விரித்து
    மேலெழும்பியது
    அக்கினிக்குஞ்சான
    ஃபீனிக்ஸ் பறவை.

    உடலை சிலுப்பி
    உயரப் பறந்து
    தன் அடுத்த பயணத்தை தொடங்கியது.



    இப்படித் தோன்றுகிறது
    March, March, March, March, March
    என்பதைக் காணும்போது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?