கண்களால் சிரிப்பவள்!
நானும் அவளும் எதிரெதிரே அமர்ந்திருந்தோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது, அப்போது கடிகாரத்தில் மணிமுள் எங்கே இருந்தது என்பது. இரவு ஒன்பது முப்பதுக்கு அவளுடன் குறுஞ்செய்தி உரையாடல் புரிந்திருந்தால் கூட, மகிழ்ச்சியில் திளைத்திருப்பேன். சற்றேறக்குறைய முன்னூறு சதுரமீட்டர் பரப்பளவுள்ள டிபார்ட்மெண்ட்டில் நானும் அவளும் மட்டும் இருந்தோம், அவளுக்குப் பின்னாலிருந்த சுவரில் சாரை சாரையாகச் சென்ற எறும்புகளுடன் சேர்ந்து. அவளுடைய மேசைக்கு உடனடி இடதுபுறத்தில்தான் என்னுடைய மேசை என்றபோதிலும்கூட, அவளுடைய மேசைக்கு எதிரிலேயே ஒரு நாற்காலியைப்போட்டு அமர்ந்திருந்தேன். அவளுடைய நாற்காலியின் கைகளுக்கும் மேசைக்கும் இடையே ஒரு சாய்வுப்பாலம் அமைத்த ஓர் அட்டையின் மீது இருந்தது, ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. எனக்கு முன்னால் அவளது மேசைமேலிருந்தது அடுத்த நாள் விழாவுக்கான MoC வாசகங்களைத் தாங்கவேண்டிய ஒரு வெள்ளைத்தாள். கன்னத்தில் கைவைத்தபடி யோசிக்கும் சாக்கில், அவளுடைய மேலுதட்டின் விளிம்புகளை இரசித்துக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தரச்சான்றிதழ் தரும் அதிகார...