Posts

Showing posts from September, 2019

கண்களால் சிரிப்பவள்!

நானும் அவளும் எதிரெதிரே அமர்ந்திருந்தோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது, அப்போது கடிகாரத்தில் மணிமுள் எங்கே இருந்தது என்பது. இரவு ஒன்பது முப்பதுக்கு அவளுடன் குறுஞ்செய்தி உரையாடல் புரிந்திருந்தால் கூட, மகிழ்ச்சியில் திளைத்திருப்பேன். சற்றேறக்குறைய முன்னூறு சதுரமீட்டர் பரப்பளவுள்ள டிபார்ட்மெண்ட்டில் நானும் அவளும் மட்டும் இருந்தோம், அவளுக்குப் பின்னாலிருந்த சுவரில் சாரை சாரையாகச் சென்ற எறும்புகளுடன் சேர்ந்து. அவளுடைய மேசைக்கு உடனடி இடதுபுறத்தில்தான் என்னுடைய மேசை என்றபோதிலும்கூட, அவளுடைய மேசைக்கு எதிரிலேயே ஒரு நாற்காலியைப்போட்டு அமர்ந்திருந்தேன். அவளுடைய நாற்காலியின் கைகளுக்கும் மேசைக்கும் இடையே ஒரு சாய்வுப்பாலம் அமைத்த ஓர் அட்டையின் மீது இருந்தது, ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. எனக்கு முன்னால் அவளது மேசைமேலிருந்தது அடுத்த நாள் விழாவுக்கான MoC வாசகங்களைத் தாங்கவேண்டிய ஒரு வெள்ளைத்தாள். கன்னத்தில் கைவைத்தபடி யோசிக்கும் சாக்கில், அவளுடைய மேலுதட்டின் விளிம்புகளை இரசித்துக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தரச்சான்றிதழ் தரும் அதிகார...

சில கேள்விகள்

ஓர் எழுத்தாளுடருடன் ஒரு நேர்காணல். ஒரு கற்பனை கேள்வி 1 ஏ ஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா? பதில் ஏ ஆர் ரஹ்மானும் யுவன் ஷங்கர் ராஜாவும் ஓரணி (Team A) மற்ற அனைத்து இசையமைப்பாளர்களும் சேர்ந்து ஓரணி (Team B) என்று வைத்துக்கொள்வோம். இசையில் ஓர் open-ended தன்மையை யாரும் முயற்சிப்பதில்லை. ஏ ஆர் ரஹ்மான் அதைத் திட்டமிட்டு, அளவெடுத்துக் கச்சிதமாகச் செய்கிறார். யுவனுக்கு அது இயல்பாகவே வருகிறது. கிளைக்கேள்வி 1a அப்படியென்றால், ரஹ்மானை விட யுவன் தானே சிறந்த இசையமைப்பாளர்?  பதில் ஒரு பின் நவீனத்துவ நாவல், திருக்குறளைவிடச் சிறந்தது எனச் சொல்லுவீர்களானால், ரஹ்மானை விட யுவன் சிறந்தவர்தான்.

உலக இலக்கியம்

வால் ஸ்ட்ரீட்களோ, கேசினோக்களோ கவலைப்படாத ஓர் இந்தியக் கிராமம். அவ்வப்போது 'தலைக்கு இத்தனை' என்று மாவட்ட ரீதியாக நிதி ஒதுக்கவும், தீபாவளி, பொங்கல்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்வதற்கும் மட்டுமே பயன்படும் கோடானுகோடி மாண்புமிகு இந்திய ஜனநாயகக் குடிமக்களில் ஐநூற்று சொச்சம் பேர் அந்த ஊரிலும் இருந்தார்கள்.  ஆங்காங்கே சுற்றிய மின்மினிப்பூச்சிகள், ஆயுளின் அந்திம காலத்தில் இருந்த நட்சத்திரங்கள், அவற்றைப் பிரதிபலித்த தெருநாய்களின் கண்கள், தெருவிளக்குகள், மாரியம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் முன்னிரவு ஏற்றப்பட்டு, நெய் தீர்ந்துபோய் அணைந்துபோயிருந்த அகல்விளக்கின் திரிநுனியில் மீதமிருந்த கங்கு, கண்டிப்பு நிறைந்த பெண் அணியும் புடவையின் கையறுநிலை அனுமதிக்கும் அளவுக்கு மட்டும் கிழக்கு ஆகாயத்தின் ஒரு மூலை  - இவற்றிலிருந்து மட்டுமே வெளிச்சம் வந்துகொண்டிருந்தது அந்த ஊருக்கு. சூரியன் இன்னும் உதிக்கவில்லை. அந்த அம்மாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கலாம். இரவு வீட்டுக்குத் திரும்பியாகவேண்டிய கட்டாயம் இல்லாத கணவனையும், வெளியூரில் தங்கிப்படிக்கும் மகனையும் பெற்ற ஓர் இந்தியப் பெண். "உனது கண்ணின் நீர...

THE SHY ROMEO

செய்துவிட்ட தவறுகள் உண்டாக்கும் குற்றவுணர்வைவிட செய்யாச் செயலால் உண்டாகும் மனக்கிலேசம் அதிகம். தைரியமின்மையும் சோம்பலும் இரண்டு கிங்கரர்கள் போல பாதுகாத்துவரும் தயக்கத்தைப் போட்டு உடைத்துவிட அவனுக்கும் ஆசைதான். ஆனால், குற்றவுணர்ச்சியால் வெந்து புழுங்குவது அவனுக்கொரு போதையைத் தந்திருக்க வேண்டும். அது அவனுக்கே தெரியாமல் போனதே பரிதாபம். தெரிந்திருந்தால், ஒரு கையால் சாராயக்கிண்ணத்தை ஏந்திக்கொண்டே இன்னொரு கையில் சிலம்பம் சுற்ற முயற்சி செய்யும் முட்டாள்தனத்தை அவன் செய்திருக்கமாட்டான். சுற்றி வளைப்பானேன்? ஒரு பொது இடத்தில், அறிமுகமே இல்லாத ஓர் அழகிய பெண்ணுடன் தானே சென்று பேசிட வேண்டும் என்பதே அவனது விருப்பம். முடிந்தால் அவளது செல்போன் நம்பரையும் வாங்கிவிடவேண்டும். இப்பேர்ப்பட்ட இலட்சியம் கொண்ட அவனின் பொர்ட்ஃபோலியோ அவ்வளவு இரசிக்கும்படி இருக்காது. பெண்கள் கூட்டம் அருகாமையில் இருந்தாலே நடைமாறிப் போய்விடும் அவனுக்கு. எப்போதாவது கல்லூரிப் பேருந்திலிருந்து முன்பக்கப் படிக்கட்டின் வழியாக இறங்கிவேண்டி வந்துவிடின், அவன் இறங்கும்போது செய்த அத்தனை செயல்களையும், நான்கைந்து முறையாவது மனதிற்குள் ஓட்ட...

நால்வர்

இது ஓர் உண்மைக்கதை அல்ல. இரண்டு பேரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கான pre-production நடந்து கொண்டிருந்த சமயம். துல்லியமாகச் சொன்னால் திரைக்கதை அமைக்கும் பணி. இயக்குனரின் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர். பேப்பரையும் பேனாவையும் வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார் எழுத்தாளர். இயக்குனரின் மனைவியும் அவரே! ஒரு டீப்பாயின் இருபுறமும் போடப்பட்ட நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள் இயக்கமும் இசையும். அவர்களுக்கு எதிரே சாக்லேட் வண்ணக் கோப்பைகளில் சுடச்சுடக் குளம்பி காத்திருக்கிறது. அச்சமயம் எழுத்து அழைக்கிறார். "Mr. Director! I have finished." இசையைப் பார்த்து இயக்கம் சொல்லுகிறார். "Let the coffee cool down. I should taste the dialogues when they're hot!" இசை அவ்வளவு எளிதில் பேசிவிடுபவரா என்ன! ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தருகிறார். இயக்கம் எழுந்துசென்று எழுத்து வைத்திருந்த பேப்பரை வாங்குகிறார். 'அழகியல் உணர்வு கொண்டவர் என அனைவராலும் பாராட்டப்படும் என் இனிய இயக்குனரே! ஒரு கவிதாயினியைவிட உமக்கு அழக...

FELLOW INTELLECTS

ஒரு பறவைகள் சரணாலயத்தில், அவைகளுக்குத் தீனி வைக்கும் வேலைக்கோ; 10:30 மணி 'இன்றே கடைசி' ஷோவில் black ticket விற்கும் ஆபத்பாந்தவனாகவோ; கவிஞர் விக்கிரமாதித்தனுடனே சுற்றிக்கொண்டு, தக்க சமயங்களில் அவர் மனதறிந்து அவருடைய சாராயக்கோப்பைகளுக்கு மிக்ஸிங் போட்டுத்தருபவனாகவோ;  அசோகமித்திரன் வீட்டில் நளபாகக்காரனாகவோ; சுப்பிரமணிய பாரதிக்கு முகக்கேசம் மழிப்பவனாகவோ; சார்லஸ் புக்கோவ்ஸ்கி-க்கு சில்லம் வைத்துத் தருபவனாகவோ; செல்வராகவனுக்கு உதவியாளனகவோ; இளையராஜாவிடம் தபேலா வாசிப்பவனாகவோ; சாம் ஆண்டர்சனின் PRO-வாகவோ; தியேட்டரில் டார்ச்பாய் வேலைக்கோ; ஓர் 'ஆல் இண்டியா பெர்மிட்' லாரியில் க்ளீனராகவோ; ஒரு கேரளத்துக் கள்ளுக்கடையில், வருபவர்களுக்கு வெந்நீரில் வேகவைத்த குச்சிக்கிழங்கும், கருவாட்டுப் பொரியலும் கொணர்ந்து தந்துகொண்டே, அந்தக்கடையில் ஓர் அறிவிக்கப்படாத Your friendly neighborhood RJ-வாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு கன்னியாகுமரி அகதிச் சிறுவனாகவோ; கண்பார்வை இல்லாத ஒரு ஜெயகாந்தன் இரசிகருக்கு புத்தக வாசிப்பாளனாகவோ பிழைப்பு நடத்தச் சொல்லியிருந்தால், குதூகலத்துடன் சோத்துப் போசியைத் தூக்கிய...

முதலும் முடிவுமாயொரு சினிமா விமர்சனம் about the most underrated classic called வடசென்னை

தினத்தந்தி விளம்பரத்தில் வடசென்னையைப் புகழ்ந்து ஒரு வாசகம் காணப்பட்டது. தமிழிலோர் ஷேக்ஸ்பியரியன் டெக்ஸ்ட் என்று. ஏதோ ஆர்வக் கோளாறில் எழுதிவிட்டார்கள் என்றே நினைத்தேன். படத்தை இரண்டுமுறை பார்த்தபிறகே புரிந்தது, அவர்கள் சொன்னது உண்மையென்று. கதையில் சில நிகழ்வுகள் நடக்கின்றன. எதையுமே நம்மிடம் மறைப்பதில்லை. ஆனாலுமே கூட நமக்கு அந்நிகழ்வின் காரணகர்த்தா யாரென்று புரிவதில்லை. அது ஓர் மிக நல்ல விஷயம் என்கிறேன். ஒரு நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதனைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லுவார்கள். வடசென்னை ஒரு நிஜவாழ்க்கை. உதாரணமாக, அன்புவின் முதல் கொலை. தன் காதலியைக் கிண்டல் செய்த ஜாவா பழனியிடம் வேண்டாமென்று சொல்லப்போய் அடிவாங்கி வருகிறான் அன்பு. எப்போதும் சீனியர் ஒருவரின் வண்டியிலிருக்கும் சாமான்கள் இரண்டை, அன்புவும் அவனது மச்சானும் நண்பனுமான கண்ணனும் எடுத்துக்கொள்கிறார்கள். தங்களிடம் சாமான் இருப்பது தெரிந்தால், ஜாவா பழனி கொஞ்சம் மதிப்பளித்துப் பேசுவான் என்கிறான் அன்பு. போகிறார்கள். சகாக்களுடன் சரக்கடித்துக் கொண்டிருக்கிறான் பழனி. 'சகாக்கள் அனைவரும் போகட்டும்,...