ஒரு சனிக்கிழமை காலை
சித்தோடு பேருந்து நிறுத்தத்தைத் தாண்டும் போது, 'செந்தில் சார்' நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். உண்மையில் அவருடைய பெயர் 'செந்தில் சார்' இல்லை. அவன்தான் அவருக்கு மானசீகமாக அந்தப் பெயரைச் சூட்டியிருந்தான். தனது புரொஃபஸர் திரு. செந்தில் அவர்களைப் போலவே இருந்ததால், அந்த இரகசியப் பெயர். பெயருக்கு உரித்தானவருக்கே தெரியாத அளவுக்கு இரகசியம். பெயர் தெரியாத அளவுக்கு அவர் அன்னியரும் இல்லை. தினமும் இரண்டு பேருமே சித்தோட்டில் பஸ் ஏறுபவர்கள் தான். இருவருமே ஒரே பள்ளியில் வேலை செய்பவர்கள்தான். இருவரும் பேசிக்கூட இருக்கிறார்கள். அவன் அந்தப் பள்ளியில் சேர்ந்த அந்த ஒரு மாதத்தில், அந்தப் பள்ளியில் அவனைவிடக் குறைவாகப் பேசிய ஒரே நபர் செந்தில் சார்தான். அவர் கோபியிலிருந்து வருபவர். வள்ளிப்புரத்தான் பாளையத்திலிருக்கும் பள்ளியிலிருந்து பள்ளிப் பேருந்து எதுவும் கோபி வரைக்கும் போகாத காரணத்தால், காலையில் ஆறரை மணிக்கு கோபியில் பஸ் ஏறி, ஏழே காலுக்கு சித்தோட்டை அடைந்து, டீக்கடையில் இரண்டு மெதுவடைகளையும் ஒரு டீயையும் காலை உணவாக எடுத்துக் கொண்டு, ஏழரைக்கு நிறுத்தத்துக்கு வரும் பஸ்சுக்காக ஏழு இருபதுக...