சிறுவூடற்பள்ளு
அவர்கள் இருவரும் தனியறையில் இருந்தார்கள். இரவு நேரம். தம்பதியர்தாம் அவர். இருவருக்குள்ளும் எவ்வித ஊடலும் இல்லை. நரம்புதளர் மூத்தோரும் அவர்கள் அல்லர். இன்னும் அவர்கள் இருவரும் தம்மிரு உடலிடை காற்றினைத் துரத்தாமலிருந்ததற்கான காரணம் என்னவெல்லாம் இருக்கமுடியுமோ, அதில் எதுவுமில்லை. ஆனாலும், அவர்கள் தனித்திருந்தனர். மந்திராலோசனையில் இருந்தனர். அது பிரபல இளம் கதாநாயகன் முகில் வண்ணனின் அலுவலகம். நேரம் இரவு பதினொன்றே கால். அவனுக்கு எதிரே புதுமுக இயக்குனர் சூடித்தந்த சுடர்க்கொடி. கட்டிலுக்குப் பதிலாக அவர்களுக்கிடையே மேசை இருந்தது. அவள் இயக்கப் போகும் முதல் படம் தொடங்குவதற்கு முன்பே, முகில் வண்ணனை இயக்க ஆரம்பித்துவிட்டனள். ஆனால் இப்போது இது ஒரு தொழில்முறை சந்திப்பு. தனது முதல் படத்துக்கு கதாநாயகனாக தன் காதல் கணவனையே ஒப்பந்தம் செய்ய வந்திருக்கிறாள். அவன் அவளுடைய காதுமடலைப் பார்க்க மாட்டான். அவள் அவனுடைய கைகளைப் பார்க்க மாட்டாள். அவளுடைய கையில் ஒப்பந்தப் பத்திரம் இருந்தது. முகில் வண்ணனின் கண்களை இமைகொட்டாமல் பார்த்தவாறே பேசினாள். "ஸீ! இந்த டாக்யுமெண்ட்ஸ்-ல இல்லாத இன்னொரு முக்கியமான கண்டிஷன நா...