Posts

Showing posts from September, 2025

என் ஆசிரியர்கள்

ராமசாமி வாத்தியார் அயலூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, நாமக்கல் பாளையம் - என்ற சொற்றொடரைப் படித்து முடிப்பதற்குள்ளாகவே முழுப் பள்ளிக்கூடத்தையும் சுற்றி வந்து விடலாம்.‌ அவ்வளவு சிறியதுதான் நான் படித்த பள்ளி. அங்கே எங்களுக்குப் பாடம் சொன்ன ஆசிரியர்களில் மூவர் மட்டுமே என் நினைவில் நிற்கிறார்கள். அதில் முதலாமவர் ராமசாமி வாத்தியார்.  அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். பத்து வயதுக்கும் கீழிருந்த குழந்தைகளுக்கு அறுபது வயது ஆசிரியர் என்பதே எவ்வளவு அழகான சூழ்நிலை! அவருக்கும் எங்களுக்குமான உறவு, ஒரு தாத்தாவுக்கும் பேரப் பிள்ளைகளுக்குமான உறவாகவே இருந்தது.  வெள்ளை வேட்டி சட்டையில்தான் வருவார்; எங்களுடன் சேர்ந்து க்ரிக்கெட் விளையாடுவார்; 'கொல கொலயா முந்திரிக்கா' என்ற விளையாட்டை எங்களுக்கு சொல்லித் தந்தவரும் அவரே.   எவ்வளவு சிரத்தையெடுத்து யோசித்தாலும், அவர் எங்களுக்குப் பாடம் நடத்தியதான நினைவு ஒன்று கூட வரவில்லை. பிறகு என்னதான் செய்வார்? கதைதான். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் அனைவரையும் சேர்த்து மொத்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையே முப்பதோ நாற்பதோதான் இ...